“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு பார்வை.

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றிய ஒரு பார்வை.
அறிமுகம்.
இலங்கையானது பல்லினங்களைக் கொண்டதொரு நாடாகும். இந்நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகள் யுத்தம் இடம்பெற்று வந்தது. 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் 19ம் திகதியுடன் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பாரிய சவால்களை சந்திக்கத்தொடங்கியது. இது உள்நாட்டு ரீதியாகவும், வெளிநாட்டு ரீதியாகவும் அமைந்திருந்தது. உள்நாட்டு ரீதியாக சந்தித்த சவால்களில் மிக முக்கியமானது யுத்தத்தின் பின்னர் சமாதானத்தினை கட்டியெழுப்புதல் என்பதாகும். யுத்தம் முடிந்து இன்று வரையிலும் இலங்கை சமாதானத்தை கட்டியெழுப்புவதில் பாரிய பின்னடைவினை கண்டுவருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

சமாதானம் என்பது, பல்லினங்கள் வாழ்கின்ற நாடொன்றில் எல்லா மக்களும் தங்களது தேவைகளை பூர்த்திச் செய்துக்கொண்டு, சமமாக வாழ்கின்ற நிலையினை சமாதானம் என்கின்றோம். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் சமாதானம் கிடைத்துவிட்டதாக சிலர் கருத்துக்களை பரப்பி வந்தனர். ஆனால், ஒரு நாட்டில் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரு இனம் சிறுபான்மையாக வாழ்கின்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திச் செய்யாத போது அல்லது அதனை பெற்றுக்கொள்ள தடையாக இருக்கின்ற போது இச்சிறுபான்மை இனம் தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையே இலங்கையிலும் இடம் பெற்றது. இதில் பெரும்பான்மை இனமானது ஆயுத பலத்தின் மூலம் சிறுபான்மை இனத்தினை வெற்றிக்கொண்டுவிட்டது. இதனை முழுமையான சமாதான நிலை என்று கூறமுடியாது. ஆகவே யுத்தத்தின் பின்னர் சமாதானத்தினை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதற்காக இலங்கை அரசு பல நெறுக்கடிகளையும் சந்தித்து. இதற்காக சில அணுகுமுறைகளையும் கையாண்டது. எனினும் அதில் பூரணமான வெற்றி கிடைத்ததா? என்பதும், அவ்வணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் எதிர்நோக்குகின்ற சவால்களும் ஆராயப்பட வேண்டியவையாகும்.

இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள்.

யுத்தத்திற்குப் பின்னர் சமாதானத்தினை கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் பின்வருமாறு நோக்கலாம்.
  1. யுத்த குற்றச்சாட்டுக்கள்.
  2. மீள்குடியேற்றப் பிரச்சினை.
  3. வட, கிழக்கு காணிப்பிரச்சினை.
  4. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை.
  5. முறையான அரசியல் தீர்வினை வழங்காமை.
  6. மொழிப்பிரச்சினை.
  7. மேலும் கூர்மையடையும் இன முரண்பாடுகள்.
  8. மத பிரிவினைகள்.
  9. வெளிநாட்டு அழுத்தங்கள்.
  10. பாதுகாப்புச் சிக்கல்கள்.
  11. கடன் சுமைகள்.
  12. மந்தமான நிலையிலுள்ள கிராமிய அபிவிருத்திகள்.
  13. வேலையின்மை பிரச்சினைகள்.
  14. ஜனநாயகம் தொடர்பான கேள்விக்குறி.
  15. நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளாமை.
  16. இனங்களுக்கு இடையிலான சந்தேக உணர்வும், வதந்திகளை பரப்புதலும்.

1.            யுத்த குற்றச்சாட்டுக்கள்.
யுத்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக பல வழிகளிலும் இலங்கை பின்தங்கிய நிலையினை அடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் தனது கௌரவத்தினையும் இலங்கை இழந்து நிற்கின்றது. முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைப் பிரச்சினை தலைதூக்கியதிலிருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனிதாபிமானச் சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை யுத்தகாலத்தில் இலங்கை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டதுடன் இதற்கான பொறுப்பினை ஏற்குமாறும் இலங்கை நிர்பந்திக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மேற்படி குற்றச்சாட்டுக்களை தனது இராஜதந்திர திறன்மூலம் தோற்கடிப்பதில் இலங்கை பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றது. இதில் முக்கியமான குற்றச்சாட்டுக்களாக வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை கொண்டமை, 2008ம் ஆண்டு சர்வதேச கண்காணிப்புக்குழு  உறுப்பினர்களை வெளியேற்றியமை, சுயாதின விசாரணைக்கு இடமளிக்காமை, சனல் 4ன் குற்றச்சாட்டுக்களுக்கு முறையான பதில் வழங்காமை போன்றன காணப்படுகின்றது.
போரின்போது இலங்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளது தற்போது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலிப்பாகவே 2012 மற்றும் 2013ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐக்கிய அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

இறுதிப் போரின்போது இராணுவத் தரப்பினர் செய்த சாகசங்கள் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தியையும், அவமானத்தையும் சர்வதேச மக்களிடமிருந்து வாரிக் கொடுத்திருக்கின்றது. இலங்கையர் என்ற அடையாளத்தை வெளிநாட்டவர் ஒருவருக்கு முன்னால் அறிமுகப்படுத்தும் போதே சனல்-4 ஆவணப்படத்தில் வருகின்ற இலங்கை இராணுவத்தின் கொடுமைகள்தான் முதலில் நினைவுக்கு வரும் மனநிலையை இந்த போர் வெற்றி உண்டுபண்ணியிருக்கிறது. இது சமாதானத்தினை கட்டியெழுப்புவதில் பெரும் சவாலாக மாறறியுள்ளது.

2.            மீள்குடியேற்றப் பிரச்சினை.
ஒரு நாட்டில் யுத்தம் நடைபெற்று முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் அதனால் தமது சொந்த வாழ்விடங்களை இழந்த மக்களுக்கு மீளவும் அவ்விடங்களில் சென்று குடியமர்ந்து தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசாங்கம் தொடர்பான நல்லெண்ணங்கள் எழும். ஆனால் இலங்கையில் வட, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்ட்டடு தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய மக்களுக்கு மீண்டும் அவர்களின் சொந்த இடங்கள் வழங்குவதில் பல பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் தமிழர்களின் சொந்த காணிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதும், குறிப்பிட்ட அளவு காணிகளுக்கு மேல் காணிகளை வைத்திருப்போரிடமிருந்து காணிகளை அரசாங்கம் அபகரிப்பதும் சமாதானத்தினை கட்டியெழுப்புவதிலுள்ள பாரிய சிக்கலாகக் காணப்படுகின்றது. சில பிரதேசங்களில் இன்றுவரை குடியமர அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக சம்பூர் பிரதேசத்தில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட வில்லை. இவ்வாறு மீள்குடியேற்றப்பிரச்சினையானது தொடர்ந்நத வண்ணம் இருப்பதால் சமாதானத்தினை நிலை நாட்டுவது சவாலாக மாறியுள்ளது.

3.            வட, கிழக்கு காணிப்பிரச்சினை.
இலங்கையில் சமாதானத்தினை ஏற்படுத்துவதில் காணப்படும் மற்றுமொரு சிக்கல் அரசாங்கத்தின் காணி அபகரிப்பு. அதாவது வடக்கிழும் கிழக்கிழும் தமழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேசங்களில் காணப்படும் காணிகளை அரச உடைமையாக்கி அவற்றை சிங்கள பெரும்பான்மை மக்களிடம் ஒப்படைக்கின்றது இது சிறுபான்மை இனங்களிடம் மனவிரக்தியினையும், போராட்ட உணர்வினையும் தூண்டுவதாக அமைகின்றது. வடமாகாணத்தில் அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப்பிரச்சினை அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான செயல்கள் சமாதானத்திற்கு பங்கம் விளைவிப்பவையாகவே காணப்படுகின்றது.

4. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை.
இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் பல தரப்பிலும் இருந்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கியது. இதனால் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவினை அமைத்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டது. இவ்வாணைக்குழுவும் தமது வேலையை திறம்பட மேற்கொண்டு அரசாங்கத்திடம் அறிக்கையினை கையளித்தது. எனினும் அரசாங்கம் அதில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது. இதனால் சர்வதேச ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படத்தொடங்கியது. சர்வதேச நாடுகளும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகளை நடைமுறைப்படுத்துமாறு வழியுறுத்தி வருகின்றன. இவவறிக்கையானது, பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு குடியமர்த்தப்பட வேண்டும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்;டவர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கையினை நடைமுறைப்படுத்தினால் ஓரளவு சமத்துவத்தினை நிலைநாட்டலாம் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலை தென்னாபிரிக்காவில் ஏற்பட்டது. அதாவது இனவெறிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய தென்னபிரிக்கா இன்று இனவெறி ஒழிப்பிற்கும் ஒரு முன்மாதிரியாகக் காணப்படுகின்றது. உண்மையை கண்டறிவதற்கும் நல்லிணக்கத்திற்குமானதொரு ஆணைக்குழு அங்கு 1995ம் ஆண்டு அமைக்கபட்டது. இதன் பரிந்துரைகள் பலவற்றை அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் இங்கு காணப்பட்ட இனவெறி ஒழிக்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையினை இலங்கையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.

5.  முறையான அரசியல் தீர்வினை வழங்காமை.
ஒரு யுதித்தில் வெற்றிக்கொண்ட தரப்பினர் தோல்வியுற்ற தரப்பினரை அடிமைகள் போல் ஆட்சிபுரிவது சரியான முறையல்ல. அதிலும் அவ்வாறான நிலையில் அங்கு சமாதானம் நிலவ முடியாது. மாறாக மீண்டும் முரண்பாடுகள் தோன்றும் நிலையே காணப்படும். எனவே, ஒரு நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் மீண்டும் அவ்வாறானதொரு நிலை தோன்றாமல் இருக்க முறையான அரசியல் தீர்வு வழங்குவது அவசியமானதாகும். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் அரசாங்கம் அரசியல் தீர்வுத்திட்டங்கள் பலவற்றை கூறிவந்தது. அதாவது, 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தல் மற்றும் 13 பிலஸ் போன்ற கதைகளும் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டன. ஆனால், நடைமுறையில் வடமாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை அமைக்கப்பட்டப்போதும் அதற்கான முறையான அதிகாரங்கள் வழங்கப்படாமல் அது வெறும் சபையாகவே காணப்படுகின்றது. இதனால் வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை இனங்கள் எப்பொதும் அரசாங்கத்தினை அச்ச உணர்வுடனையே நோக்குகின்றனர். இது அவ்வளவு ஆரோகிகியமானதன்று. இதனால் சமாதானத்தை நிலைநாட்டுதல் என்பது கேள்விக்குறியாகின்றது.

ஒவ்வொரு தேசிய அரசிலும் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் எப்போதும் பெரும்பான்மை இனத்தவர் மீது அச்ச உணர்வு இருக்கின்றது. இதனால் ஒவ்வொரு சிறுபான்மையினரும் சுயநிர்ணய உரிமையினை கேட்க கூடும். இது சமாதானத்திற்கு ஆபத்தானது. எனவே, சர்வதேச சட்டம் மூலமாக ஒவ்வொரு தேசத்தினதும் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடிப்படை உரிமைகள் பேணப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதன்படி போலந்து, ரூமேனியா, யூக்கோஸ்லேவியா, செக்கோஸ்லேவியா, கிறிஸ் போன்ற தேசிய அரசுகள் மொழி, இனம், சமய சிறுபான்மை குழுக்களுக்கு சம உரிமைகளை வழங்கின (இம்முறை நிலைப்பெறவில்லை), ஆனால், கனடா பிரஞ்சு ஆங்கிலம் பேசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது அரசியல் அமைப்பிபைத் திருத்தியுள்ளது. இத்தாலி ஸேர்மன் மொழி பேசும் மக்களிற்காகத் தன்னாதிக்கமுள்ள மாகாண அரசொன்றை நிறுவியுள்ளது. ப்பிலிமிங்ஸ், வெலூன்ஸ் இன மக்களிற்கு கலாசார சுயாட்சியினை வழங்குவதற்குபெல்ஜியம் தனது யாப்பினைத் திருத்தியுள்ளது. இந்த வழிமுறையினை இலங்கை கையாளும் வரை சமாதானம் என்பது சிக்கலானதாகவே காணப்படும்.

6.   மொழிப்பிரச்சினை.
இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கிய அம்சமாகக்காணப்படுவது மொழிபற்றிய பிரச்சினையாகும். யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் மும்மொழியினை அமுலாக்குவது பற்றி குறிப்பிட்டு வந்தது. எனினும் முறையான திமட்டங்கள் இன்மையால் இது தோல்வி கண்டுள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியினை பாவித்தப்போதும் அம்மக்கள் தலைநகரில் தமது அலுவல்களை முடித்துக்கொள்ள வேண்டுமாயின் சிங்கள மொழியில் தேர்ச்சிப்பெற்றிருத்தல் அவசியமாகின்றது. மேலும் தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு கட்டாயம் சிங்களம் கற்க வேண்டும் என்று வழியுறுத்தப்படகின்றது. ஆனால், சிங்களப்பிரதேசங்களில் இந்த அளவிற்கு தமிழ் மொழி அமுலாக்கம் நடைபெறுகின்றதா? என்ற ஒரு விமர்சனமும் காணப்படுகின்றது.

ஒரு முரண்பாட்டைத் தீர்க்க வேண்டுமாயின் அம்முரண்பாட்டின் மூலங்களை இனங்கண்டு அவற்றை அழித்தல் வேண்டும். ஆனால், இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கிய காரணியாக விளங்கும் மொழிப்பற்றிய பிரச்சினையினை யுத்தம் முடிவடைந்தும், அரசாங்கத்தினால் முறையாக கையாள முடியாமல் போனமை சமாதானத்தினை நிலைநாட்டுவதற்கு தடையாகவே உள்ளது. ஆனால், தென்னாபிரிக்காவில் முரண்பாடு மட்டும் முடிவிற்கு கொண்டுவரப்பட வில்லை. முரண்பாட்டிற்கு காரணமாக இருந்த இனவெறி ஆதிக்கமும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இலங்கையில் முரண்பாட்டிற்கான காரணங்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஒழிக்கப்பட வில்லை.

7.  மேலும் கூர்மையடையும் இன முரண்பாடுகள்.
இலங்கையில் சுமார் முப்பது வருடங்கள் நடைபெற்ற யுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைவது இன முரண்பாடாகும். எனினும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டப் பின்னர், இனமுரண்பாடு ஓரளவு தனது விஷ்வரூபத்தினை குறைத்துக்கொண்டப்போதும், தற்போது அது வேறுவடிவத்தினை எடுத்தள்ளமையை நாம் காணலாம். அதாவது, முரண்பாடு என்பது எப்போதும் ஒரு நிலையில் இருந்து இன்னுமொரு நிலைக்கு நிலைமாறுமே தவிற முற்றாக இல்லாமல் போகாது என்பதற்கு இலங்கையின் இனமுரண்பாடு சரியான உதாரணமாகும்.

யுத்தத்திற்குப் பின்னர் அரசாங்கம் சமாதானத்தினை நிலைநாட்ட முற்படும் போது, இனமுரண்பாடு தனது கூர்மையான வடிவத்தின் மூலம் அதனை தடுக்கின்றது. முப்பது வருடங்கள் சிங்கள தமிழர் என்ற இரு இனங்களுக்கு மத்தியில் காணப்பட்ட முரண்பாடு யுத்தம் முடிந்த அடுத்த நாள் சிங்கள முஸ்லிம் முரண்பாடாக தன்னை நிலைமாற்றிக் கொண்டது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல், முஸ்லிம் பள்ளிகள் மீதான தாக்குதல் எனத்தொடங்கி இன்று களுத்தறை மாவட்டத்தில் பாரிய இன அழிப்பு செய்பாடாக மாறியுள்ளது. இந்நிலையில் சமாதானத்தினை நிலைநாட்டுவது என்பது சவாலான ஒன்றாகவே காணப்படுகின்றது. 

8.  மத பிரிவினைகள்.
பல மதங்களை கொண்ட ஒரு நாட்டில் அனைத்து மதங்களு;ககுமான சுதந்திரம் காணப்பட்டால் மாத்திரமே அங்கு ஒற்றுமையும், சமாதானமும் நிலவமுடியும். இலங்கையில் பெரும்பான்மையாக வாழ்கின்ற பௌத்தர்கள் சிறுபான்மை மதங்களை அடக்கி ஒடுக்குவதையே தமது குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றனர். யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதும் மத ரீதியிலான தாக்குதல்கள் தொடங்கிவிட்டன. குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்து கோயில்களை இடித்து பௌத்த விகாரைகளை புனரமைக்க முற்பட்டமை, தமிழ் பிரதேசங்கள் பலவற்றில் புத்தரின் சிலைகளை அமைத்தமை, முஸ்லிம் பள்ளிவாசல்களை தாக்கி உடைத்தமை என்று தொடர்ந்துக்கொண்டே செல்கின்றது. மேலும், பொதுபலசேனா என்ற அமைப்பு இந்நாடு பௌத்த நாடு இது பௌத்தர்களுக்கு சொந்தம் என்று தமது கருத்துக்களை பரப்பி வருகின்றது. இது சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாது உள்ளது. இது சமாதானத்தினை பாதிக்கின்ற காரணியாக அமைகின்றது.

9.   வெளிநாட்டு அழுத்தங்கள்.
இலங்கையில் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவந்த அரசாங்கத்தினால், யுத்தம் முடிவுற்றதும் தனது கொள்கையில் சுயமாக செற்பட முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. யுத்தம் முடிவுற்றதும் வெளிநாடுகள் பலவற்றில் இருந்து அழுத்தங்கள் பல தோன்றின. இதில் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் முக்கியமானவை. இதனால், இலங்கையில் காணப்படும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் வெளிநாடுகள் என்றதுமே ஒரு பயம் காணப்படுகின்றது. தமது நாட்டை இரண்டாக கூறுபோட்டுவிடுவார்கள் என்று இவர்கள் கருதுகின்றனர். இதனால் வெளிநாடுகளையும், புலம்பெயர் தமிழர்களையும் விடுதலைப் புலிகளாகவே பார்க்கின்றனர் சிங்கள மக்கள். இது சமாதானத்தினை கட்டியெழப்பும் முயற்சியில் பாரிய தடையாக அமைகின்றது.

10.  பாதுகாப்புச் சிக்கல்கள்.
யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் இராணுவத்தினை அதிகமாக படையில் சேர்த்துக்கொண்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்ததும் அவர்களை ஒரே தடவையில் வேலையில் இருந்து நிறுத்த முடியாது. அரசாங்கம் அவ்வாறு செய்தால் அது அரசாங்கத்திற்கு பாதிப்பாகவே அமைந்துவிடும். இதனால், யுத்தத்தில் ஈடுபட்ட மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு புனர்வாழ்வு இழிக்கப்பட்டதோ அதேபோன்று இராணுவத்தினருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டே சமூகத்தோடு இணைத்தல் வேண்டும். இதனால் ஒரே தடவையில் படைகுறைப்பு செய்யாமல், ஒரு நீண்ட காலத்திட்டமாகவே இதனை செய்யமுடியும். அவ்வாறு செய்ய முற்படும்போது வடக்கில் படையினரின் தொகை அதிகம் மற்றும் அவர்களின் செயற்பாடுகளில் அதிர்ப்தி என்பன தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. தமது காணிகளை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையானது சமாதானத்தினை பாதிப்பதாகவே அமைகின்றது.

11.   கடன் சுமைகள்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யுத்தத்திற்காக இலங்கை அரசாங்கம் பெருமளவான நிதியினை ஒதுக்கீடு செய்தது இதனால் நாட்டில் பாரிய பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்தும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்துக்கொண்டேயுள்ளது. இhதனால் பலர் கடன் சுமைகளு;ககு ஆளாகுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் மன விரக்திக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. தென்னிலங்கையில் தான் அதிகமான அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது, அதற்காகத்தான் விலை ஏற்றத்தினை ஏற்படுத்துகின்றது என்று வடக்கில் வாழும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இதனையே மறபக்கத்தில் தென்னிலங்கை சிங்களவர்கள் விமர்சிக்கின்றனர். இது சமாதானத்திற்கு ஆரோக்கியமானதல்ல. எனவே அரசாங்கம் பொருளாதாரத்தினை திட்டமிட்டு முன்னெடுக்காத வரை அது சமாதானத்திற்கு சவாலாகவே அமைந்துவிடும்.

12.   மந்தமான நிலையிலுள்ள கிராமிய அபிவிருத்திகள்.
கிராமத்தை சுபீட்சமிக்க மக்களின் வாழ்க்கை நிலையமாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் நேக்காகும். இதற்காகவே மகிந்த சிந்தனை மூலம் பல கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் திவிநெகும, புரநெகும, கமநெகும, வடக்கின் வசந்தம்;, கிழக்கின் உதயம் போன்றவற்றை கூறலாம். இதற்காக பல நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் கீழ் வீடமைப்பு வசதிகள், விவசாய ஊக்குவிப்பு, மீன்பிடி தொழில் ஊக்குவிப்பு, போன்றன மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு பல திட்டங்களினூடாக கிராமிய அபிவிருத்தியினை எதிர்பார்த்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இவை வெற்றியளிப்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாகவே உள்ளது.

இதில் பெரும்சவாலாக இருப்பது கிராமிய அபிவிருத்தி நிதியில் மோசடிகள் இடம்பெறுவதாகும். வீடமைப்பு, மற்றும் விவசாயத்துக்காக பல மானியங்கள் வழங்க வந்தாலும் அவை பெரும்பாலும் முழுமையாக மக்களை சென்றடைவதில்லை. இவ் மோசடிகள் அரசியல்வாதிகளினாலும், அரசாங்க உத்தியோகத்தர்களினாலும் இடம்பெறுகின்றது. அல்லது தாம் சார்ந்த மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கும் ஒரு போக்கும் காணப்படுகின்றது. திவிநெகும திட்டத்தின் கீழ் கிராமிய விவசாயத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு மானியங்கள் வழங்கினாலும் அவற்றினை மக்கள் திறன்பட செயற்படுத்தாத நிலையும் காணப்படுகிறது. இது சமாதானத்திற்கு பாதிப்பாய் அமையக்கூடும்.

13.  வேலையின்மை பிரச்சினைகள்.
வேலையின்மை பிரச்சினையானது தற்போதைய அரசாங்கத்தினால் பெரும்மளவு குறை;கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. எனினும் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டப் போதும் வடக்கில் இன்னும் தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. இது வடக்கிழ் வாழும் தமிழர்களை விரக்திக்கு இட்டுச்சென்றுள்ளது. இதனால் வடக்கில் வாழும் கற்ற சமூகம் வெளிநாடுகளுக்குச் செல்வது மற்றுமன்றி அரசாங்கத்தின் மீது விரக்தி அடைந்தவர்களாகவும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இது சமாததாத்தினை ஏற்படுத்துவதிலுள்ள பாரிய பிரச்சினையாகும்.

14.   ஜனநாயகம் தொடர்பான கேள்விக்குறி.
யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் முகம்கொடுத்த பிரச்சினைகளில் ஒன்று ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுதல் என்பதாகும். நடைமுறையில் நாட்டில் ஜனநாயகம் குன்றிய செயற்பாடுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. கட்சிகளின் மேலாதிக்கம், கட்சி உறுப்பினர்களின் அடாவடித்தனங்கள் என்பன நாட்டு மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஊழல் ஜனநாயகத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது. நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்தும் கொலை, கொள்லை என்று தொடர்ந்துக்கொண் செல்கின்றது. இது ஜனநாயகத்தினை கேள்விக்கு உட்படுத்துகின்றது. அரசதுறைகளில் அதிகரித்து வரும் ஊழல் மற்றும் நிதி மோசடி என்பன ஊடகங்களில் வெளியாகும் போது மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையற்றவர்களாக மாறுகின்றனர். இதனால் சமாதானம் என்பது அவர்களிடம் எட்ட முடியாத இலக்காகவே காணப்படுகின்றது.

15.    நல்லிணக்க செயற்பாடுகளை மேற்கொள்ளாமை.
இரண்டு இனங்களு;ககு இடையில் மோதல் நடைபெற்று மோதல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால், அவ்விரு இனங்களு;ககு இடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். இலங்கையில் இதனை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டதாகவே பலர் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கம் பேச்சளவில் மட்டுமே நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக பேசிவருவதாகவும் நடைமுறையில் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். இது சமாதானத்திற்கு பாதிப்பாக அமைகின்றது.

16. இனங்களுக்கு இடையிலான சந்தேக உணர்வும், வதந்திகளை பரப்புதலும்.
இலங்கையில் சிங்கள-தமிழ்-முஸ்லிம் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை என்பது மிகவும் குறைவடைந்து விட்டது. ஒரு இனத்தினை இன்னுமொரு இனம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையே தற்போதுள்ளது. இதனால் ஒருயினம் ஏதாவது ஒரு திட்டத்தினை அறிமுகம் படுத்தும் போது அதனை மற்றுமொரு இனம் தடுப்பதாகவே காணப்படுகின்றது. இவற்றோடு, இனங்களு;ககு இடையில் வதந்திகளை பரப்பும் செயற்பாடும் இன்று இடம்பெற்று வருகின்றது. இது மூவினங்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. இதனை சில அரசியல் தலைவர்கள் தமது அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனை நுண்ணியல் அரசியல்(Micro Politics) என்று அழைக்கின்றார்கள். இது சமாதனத்தினை ஏற்படுத்துவதில் காணப்படும் பாரிய சவாலாகவே காணப்படுகின்றது.

முடிவுரை.
இலங்கையின் இனமுரண்பாடானது பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு வகைகளில் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த முப்பது ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த்தினை ஆயுத பலத்தின் மூலம் மடிவிற்கு கொண்டுவந்த அரசாங்கம் இனமுரண்பாடு முடிந்து விட்டது என்று கூறுகின்றது. ஆனால் முரண்பாடானது தீர்க்கப்பட வில்லை. முரண்பாட்டினை தீக்க வேண்டுமாயின் முரண்பாடு தோன்றும் காரணங்களை அடையாளம் கண்டு அவற்றை நீக்குதல் வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதானம் நிலவ முடியும். முரண்பாட்டிற்கான மூலங்கள் களையப்படாத வரை முரண்பாடு தோன்றிக்கொண்டே இருக்கும். இனமுரண்பாட்டை முடிவிற்கு கொண்டுவந்த நாடான தென்னாபிரிக்காவை இலங்கை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட முயற்சிக்க வேணடும். அப்போதுதான் உண்மையான சமாதானத்தினை கட்டியெழுப்பலாம். ஆனால், இலங்கையில் இன்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் அல்லது சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ள காரணிகள் பெருகிக்கொண்டே செல்கின்றது இது அந்தளவு ஆரோக்கியமான விடயமல்ல.